ஆக்கி வைத்த உலகமெல்லாம்
துன்பமின்றி கண்ணுறங்க
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
நிலா துண்டு மண் வந்து
முதல் பல்லென்று தோன்றியதோ!
வண்ண மயில் ஆடி வந்து
அடியெடுத்து பழக்கியதோ !
வான் நிறத்தை தான் சேர்த்து
பிள்ளையென்று வந்ததிங்கே-
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
காளிங்கன் தலை நடுவே
நர்த்தனங்கள் ஆடி நின்றான்
மாயைகள் செய்து தினம்
புண் சிரிப்பாய் பூத்திடுவான்
வெண்ணெய் உண்டு மண்ணையுண்டு
வேடிக்கை காட்டிடுவான்-
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
பசுக்களுடன் இளங்கன்றாய்
துள்ளி வந்து ஆடிடுவான் !
மலையதனை குடை எனவே
தூக்கி நின்ற கள்வனவன் !
கோகுலத்தின் அன்னையர்க்கு
முதற்பிள்ளை அவனாவன் -
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
மலர்கின்ற மலரெல்லாம் அவன்
பாதம் சேர தவமிருக்கும்
யசோதையின் மைந்தனென்று
கோகுலத்தில் வந்து நின்றான்
வாசு தேவன் பால கிருஷ்ணன்
மதுசூதன கோபாலன் -
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
இடைக்குலத்து வேந்தனவன்
குறும்பு பல செய்திடுவான்
செல்லமென கில்லிடுவார்
கன்னங்கள் நொந்திடுமோ
மணல்தனிலே ஓடியதால்
சிவந்திடுமோ சிறு கால்கள் -
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான்
யமுனை நதி கரைதனிலே
நதியலையின் தாலாட்டில்
தேன் குழலிசை இனிமையிலே
வெண் பட்டின் மென்மையிலே
தென்றவள் தலை கோத
தாயவளின் மடி தனிலே -
காக்கின்ற பிள்ளையவன்
களைப்புடனே கண்ணயர்ந்தான் !!!