Monday, January 18, 2010

உன்னுடனே என்றென்றும் உலவிடும் நிலவு !!!

வானமாய் நீயும்  
நிலவென  நானும்  
அன்பாய்  பொழிந்து  
ஒளியாய்  சிரித்து  - உன்
துன்பத்தில்  தேய்ந்து  - பின் 
இன்பத்தில்  வளர்ந்து 
நீ  கோபிக்கும்  வேளை
கொடும்  இருளிடத்தில்  புதைந்து  - என 
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!

கார்மேகம் சிலநேரம்
மறைத்திட  நேரும்- அதில் 
தன்னிறமும் இருட்டெனவே  
மாறிடல்  கூடும்      
புயலான  குளிர்க்கற்றில் - நான் 
உறைந்திட்ட  நேரம்- பகல் 
சூரியன்   தன் ஒளிதனிலே
விழுங்கிட்ட  போதும்  
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!

உருகிய  அன்பை  
மருகிய விழியை  
அருகினில்  நின்று  
மயங்கிய  நினைவை  
மறந்திடல்   ஏனோ
நெருப்பின்  உருவாய் 
வெறுப்பின் பொருளாய் - நான்  
தோன்றிடும்  போதும்   
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!

நீ சுட்டியதிசையில்
பயணித்து வந்த
பண்பட்டு பழகா
சிந்தனைக் கருவி
கொன்றிடும்  தூரம்
நீ சென்றிட்ட  போதும்
தன் செயல்தனை இழந்து
உன்  நினைவினில்  வாடும்  - இது
உன்னுடனே என்றென்றும்
உலவிய   நிலவு!

உனக்கெனவே காத்திருக்கும்
அழகிய நிலவு
முகில்மழையில் முழ்கி தினம்
கரைந்திடும்  நிலவு
காற்றெல்லாம்  உன் வாசம்
உணர்ந்திடும்  நிலவு
உனக்கெனவே காத்திருக்கும்
அழகிய நிலவு - இது
உன்னுடனே என்றென்றும்
உலவிடும்  நிலவு!!!!